Saturday, August 29, 2015

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு?


பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
பி.எட்., படிப்பில் புதிய விதிமுறைகள் தொடர்பான குழப்பத்தால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஒரு மாதம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட்., படிப்பு எத்தனை ஆண்டு என்ற குழப்பம் தீர்க்கப்படாமலேயே, மாணவர் சேர்க்கை பணி துவங்கியுள்ளது. மத்திய அரசு அளித்த புதிய விதிமுறைகளையும், தமிழக அரசு எந்த திருத்தமும் இன்றி, அப்படியே வெளியிட்டு உள்ளது.இதன்படி, பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., முடித்தவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பொதுவாக, பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - பி.ஏ., -எம்.ஏ., போன்ற பட்டப்படிப்புகளில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல் மற்றும் மொழிப் பாடங்களில், அதாவது, பள்ளிகளில் பிளஸ் 2 வரை, அமலில் உள்ள பாடப்பிரிவுகளை படித்தால் மட்டுமே, அவர்களை, பி.எட்., படிப்பில் சேர்ப்பது வழக்கம். பி.எட்., முடித்த பின், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியராக பணி வாய்ப்பு பெறுவர்.
அதுவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களே, ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால், பி.இ., - பி.டெக்., முடித்தால், அவர்கள் படிக்கும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாடப்பிரிவுகள், பள்ளிகளில் கிடையாது. எனவே, அவர்களை எப்படி ஆசிரியர் பணியில் சேர்க்க முடியும். அதற்கு ஏற்றார் போல் பாடத்திட்டம் மாறுமா; எப்போது மாற்றப்படும். பணி நியமன விதிகளில் மாற்றம் வருமா என, பல கேள்விகள் எழுந்துள்ளன.
புது நடைமுறை வேண்டாம்:
இதுகுறித்து, தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் கூறும்போது, ''இது குளறுபடியான அறிவிப்பு. பி.இ., - பி.டெக்., படிப்புக்கும், பள்ளிப்படிக்கும் இணை வைக்க முடியாது.''அப்படி வைப்பதாக இருந்தால், அந்த பாடப்பிரிவுகள் தனியாக பள்ளிகளில் துவங்கப்பட வேண்டும். எனவே, புதிய நடைமுறை தேவையற்ற பிரச்னைகளையும், குழப்பத்தையுமே உருவாக்கும்,'' என்றார்.
மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி:
இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்.எட்., படிப்புக்கு அந்தந்த கல்லுாரிகளே மாணவர்களை சேர்த்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பரிசீலனைக்கு பின், தேர்வானவர்கள் கலந்தாய்வுக்கு வர, இந்த ஆண்டு முதல் முறையாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட உள்ளது.

Friday, August 28, 2015

பி.எட். கலந்தாய்வு: செப்.3 முதல் விண்ணப்ப விநியோகம்?


'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Wednesday, August 5, 2015

தொலைதூரக்கல்வியில் பிஎட் படிப்பில் சேர இடைநிலை ஆசிரியர் பயிற்சிஅவசியம் !!


தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.
என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்பு, ஆசிரியர் கல்வி பயிற்சியில் பல் வேறு மாற்றங்களை கொண்டுவந் துள்ளது. பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிஎட் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் என்சிடிஇ-யின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பிஎட் மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார். கோவை பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் தொலைதூரக்கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவத் துடன் பணியில் இருக்கின்ற பட்டதாரிகள் இதில் சேரலாம். பல்கலைக்கழகத்துக்கு ஏற்ப நுழைவுத்தேர்வு அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
என்சிடிஇ-யின் புதிய விதிமுறை யின்படி, தொலைதூரக்கல்வியில் பிஎட் படிப்பில் சேர இடைநிலை ஆசிரியர் பயிற்சி (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) அவ சியம். அத்துடன் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். என்சிடிஇ- யின் இந்த புதிய விதிமுறை யின்படிதான் அடுத்த ஆண்டு தொலைதூரக்கல்வி பி.எட். படிப் பில் மாணவர்களைச் சேர்க்க முடிவுசெய்திருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

Friday, July 24, 2015

கல்வியியல் பல்கலைக்கு இடைக்கால கமிட்டி அமைப்பு

கல்வியியல் பல்கலைக்கு இடைக்கால கமிட்டி அமைப்பு
ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, பல்கலை பணிகளை கவனிக்க, உயர்கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில், மூன்று பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பி.எட்., - எம்.எட்., - எம்.பில்., படிப்புகளை நடத்தும், 690 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.இந்த பல்கலையின் துணைவேந்தராக இருந்த விஸ்வநாதன், 22ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இவர், 2012 முதல் துணைவேந்தராக பணியாற்றியவர். பி.எட்., படிப்பில், 10 புதிய பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்தார்.
எம்.பில்., மற்றும் பி.எச்டி., ஆராய்ச்சிப் படிப்புகளையும் அறிமுகப்படுத்தினார்.பி.எட்., படிப்பில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங், 'ஆன்-லைன்' வருகைப்பதிவேடு, பல்கலை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் போன்றபல திட்டங்களை அமல்படுத்தினார்.அவர் ஓய்வுபெற்ற நிலையில், பல்கலையின் பணிகளை கவனிக்க, மூன்று பேர் அடங்கிய இடைக்காலக் கமிட்டியை அரசு அமைத்துள்ளது. தமிழகஉயர் கல்வி முதன்மைச் செயலர் அபூர்வா, கல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் கோவிந்தன் ஆகியோர் கமிட்டி யில் இடம் பெற்றுள்ளனர்.'இன்னும், மூன்று மாதங்களில், பல்கலைக்கு புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார்' என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன

Saturday, July 18, 2015

பி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூரியே நடத்துகிறது; எம்.மார்க் நெல்சன்


ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில் நடத்த உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். இடங்கள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஒப்படைக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, பல ஆண்டுகளாக சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வந்தது.
கடந்த 2014-15 கல்வியாண்டில் இந்தக் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதன்முறையாக கலந்தாய்வை நடத்திய பல்கலைக்கழகம், புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தது.அதாவது, சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த பி.எட். கலந்தாய்வை, இணையவழி மூலம் சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய நான்கு இடங்களில் நடத்தியது. அது மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றபோதும், பி.எட். சேர்க்கை தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில், நிகழாண்டில் (2015-16) பி.எட். கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு மீண்டும் லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இதுகுறித்து பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவர் கூறியது:
பி.எட். சேர்க்கை தொடர்பான அரசு உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அதில் கலந்தாய்வு ஒருங்கிணைப்பு அதிகாரியாக (நோடல்) விலிங்டன் சீமாட்டி கல்லூரி முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.எனவே, நிகழாண்டில் கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்த முடியாது. அந்தக் கல்லூரிதான் நடத்தும் என்றார்.

பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியீடு: பயன்பாட்டு வேதியியல் பட்டமும் சேர்ப்பு


நிகழ் கல்வியாண்டுக்கான ( 2015-16) பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயன்பாட்டு வேதியியல் (அப்ளைடு கெமிஸ்ட்ரி) துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன.
கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவி இயற்பியல், உயரி இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், பயன்பாட்டு வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரித் தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், நுண் உயிரியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளநிலை பட்டங்களை முடித்தவர்கள் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

ஓ.சி. பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், பி.சி, பி.சி.எம். பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீதமும், எம்.பி.சி. பிரிவினர் 43 சதவீதமும், எஸ்.சி, எஸ்.டி, எஸ்சிஏ பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருப்பது அவசியம்.
பொருளாதாரம், வணிகவியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், இந்திய கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம். இதுவரை ஓராண்டாக இருந்துவந்த பி.எட். படிப்புக் காலம், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின்படி இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பி.எட்., மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு


இந்த ஆண்டு, பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தர வரிசை பட்டியலில், உயர் படிப்புக்கு ஏற்ற, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு வரை, பி.எட்., ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இம்மாத இறுதியில், பி.எட்., மாணவர் சேர்க்கையைத் துவங்க, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது. அதற்காக, புதிய விதிமுறைகளை, தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:
* பி.எட்., படிப்பில் சேர, ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
*எம்.பில்., - பிஎச்.டி., மற்றும் முதுகலை படிப்பு படித்தவர்களும், சேர முடியும்.
* இளங்கலை படிப்பில், முன்னேறிய வகுப்பினர், 50; பிற்படுத்தப்பட்டோர், 45; மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 43; தலித் மற்றும் அருந்ததியர், 40 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் மதிப்பெண்களுக்கு ஏற்ப, தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். முதுகலை, 4; எம்.பில்., 5; பிஎச்.டி., 6 என 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.
* மேலும், 19 வகையான, 'ஆப்ஷனல்' பாடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* பி.எட்., மாணவர் சேர்க்கை, சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் நடக்கும்.மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் தேதி மற்றும் கவுன்சிலிங் குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Wednesday, June 24, 2015

இரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே


பி.பி.எட்., எனப்படும் உடற்கல்வியியல் இரண்டு ஆண்டு படிப்பில் புதிதாக யோகா, கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக எம்.எட்., படிக்க வேண்டும். யு.ஜி.சி., ம ற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பல்கலை (என்.சி.டி.இ.,) இணைந்து பி.எட்., படிப்புக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, பி.எட்., எம்.எட்., படிப்புக்காலம் இனி இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பி.எட்., படிப்புக்கு 723 கல்லுாரிகள், உடற்கல்வியியல் படிப்பான 'பி.பி.எட்.,' படிப்புக்கு 19 கல்லுாரிகள், எம்.எட்.,க்கு 140 கல்லுாரிகள் அனுமதி பெற்றுள்ளன. இதற்கான பாடத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலை கட்டுப்பாட்டில்
உள்ள உடற்கல்வியியல், கல்வியியல் கல்லுாரிகள் இரண்டு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளன. உடற்கல்வியியல் கல்லுாரியில் பி.பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 15. ஒரு யூனிட்டுக்கு 50 மாணவர்கள் வீதம், 2 யூனிட் மாணவர்கள் முதலாண்டில் சேர்க்கப்பட உள்ளனர். இதே போல் 40 இடங்கள் உள்ள, எம்.பி.எட்., படிப்புக்குக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேர்முகத்தேர்வு வரும் 24-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இப்படிப்பில்,கால்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, ஹாக்கி, வளைகோல், கூடைப்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டு மட்டும்முன்பு செய்முறை பயிற்சியாக இருந்தது. கூடுதலாக யோகா, கராத்தே, ஜூடோ, சிலம்பம், மலையேறுதல் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தவும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, May 26, 2015

பி.எட்., எம்.எட். படிப்பு நாடு முழுவதும் இனி இரண்டு ஆண்டுகளாக அமல்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா முழுவதும் கல்வியியல் படிப்பு என்ற பி.எட் படிப்பையும், முதுநிலை கல்வியியல் படிப்பான எம்.எட் படிப்பையும் இரண்டாண்டு படிப்பாக மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தது. அப்போது பி.எட், எம்.எட் படிப்புகளை இரண்டாண்டு கால அளவு கொண்டதாக மாற்றி முடிவெடுக்கப்பட்டது.நாடு முழுவதும் இரண்டாண்டு பி.எட், எம்.எட் படிப்பு நிகழ் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் நிகழாண்டு மட்டும் பி.எட், எம்.எட் படிப்பு ஓராண்டாக இருக்கும் என்ற தவறான தகவல் பரவுகிறது. அது உண்மையல்ல. அனைத்து மாநிலங்களிலும் நிகழாண்டு முதல் பி.எட், எம்.எட் படிப்புக்கள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
மேலும் ஒருங்கிணைந்த (பி.எட், எம்.எட் படிப்பை சேர்த்து படிப்பவர்களுக்கு) 3 ஆண்டுகளாகவும், ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட் அல்லது பி.ஏ. பி.எட் ஆகியபட்டப் படிப்புகள் நான்கு ஆண்டுகளாகவும் இருக்கும். மேலும் இரண்டு வருடம் படிக்கிற ஆசிரியர் பயிற்சி படிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே தனியார்,அரசு கல்வியியல் கல்லூரிகள் புதிய விதிகளுக்கேற்ப பேராசிரியர்களை நியமிப்பதுடன் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.இக் கருத்தரங்கில் ஆசிரியர் கல்வித் துறைப் பேராசிரியர்கள், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

Thursday, February 19, 2015

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு
ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு 2012 அக்டோபரில் எழுதினேன். 108 மதிப்பெண் பெற்றேன்.'எம்.ஏ., மற்றும் பி.எட்., ஒரே ஆண்டில் படித்துள்ளதால் விதிகள்படி பணி நியமனம் வழங்க முடியாது' என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் 2013 ஜன.,20 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.பன்னீர்செல்வம், ராமநாதன் ஆஜராகினர்.
நீதிபதி உத்தரவு: மனுதாரர் பி.ஏ., முடித்தபின் பி.எட்., படித்துள்ளார். பின் எம்.ஏ., படித்துள்ளார். பி.எட்., மற்றும் எம்.ஏ., ஒரே காலத்தில் படிக்கவில்லை. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்
படுகிறது. மனுதாரருக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

Saturday, January 10, 2015

பாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடம் இளங்கலை, முதுகலை அல்லது அரசு/தனியார் பள்ளிகளில் முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதியாக இளங்கலையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500க்கான வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை பாராதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிப்.,28க்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். நுழைவுத்தேர்வு மார்ச் 29ல் நடைபெறுகிறது.
கூடுதல் விவரங்கள் அறிய பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது?
பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான காலஅளவு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட் படிப்பையும் சேர்த்து நான்கு ஆண்டுகளுக்கு படிக்ககூடிய வகையில், ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறையை நடப்பாண்டில் தொடங்க உள்ளதாக, மத்திய பள்ளி கல்வித்துறை செயலகம் தெரிவித்துள்ளது.
பி.எட் பயில்பவர்கள் குறைந்தபட்சம் 20 வாரங்களாவது மாணவர்கள் மத்தியில் வகுப்பறையில் பாடம் எடுக்கவேண்டும் என்று, மத்திய பள்ளிகல்வித்துறை செயலாளர் விர்ந்தா சாரப் தெரிவித்தார். அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது என்று நேற்று புதுடில்லியில் நடைபெற்ற மாநில பள்ளிகல்வித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் விர்ந்தா தெரிவித்தார்.

Saturday, December 6, 2014

பி.எட்., எம்.எட்., எம்.பில் முடித்த 69,473 பேருக்கு பட்டமளிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்.
8 பதக்கம் பெற்ற முதல் மாணவி
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கவர்னர் கே.ரோசய்யா தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். வேலூர் ஆக்ஸிலியம் ஆசிரியர் கல்வியில் கல்லூரி பி.எட். மாணவி எஸ்.நித்யா 8 பதக் கங்களை பெற்று பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்றார்.
2-வது இடத்தை மதுரை மங்கையற்கரசி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி சபரிஷா பெற்றார். இவர்கள், பிஎச்.டி. மாணவர்கள் உள்பட 74 பேர் நேரடியாக வந்து பட்டம் பெற்றனர்.
விழாவுக்கு வராமல் விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் 69 ஆயிரத்து 399 மாணவ-மாணவிகளுக்கும் பட்டம் கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மொத்தத்தில் 69 ஆயிரத்து 433 பேர் பட்டம் பெற்றனர்.
உயர்கல்வி படிப்போர் சதவீதம் உயர்வு
விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசுகையில் தமிழ்நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு உயர்கல்வி மாணவர் சேர்க்கை 38.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.கோவிந்தா கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:-
இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர் பணி சவால் மிகுந்தது. செல்போன், இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால் அவற்றை எளிதில் மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே ஆசிரியர்கள் வகுப்பு பாடத்துடன் நின்றுவிடாமல் மாணவர்களை அறிவு மிகுந்தவர்களாக ஆக்க வேண்டும். ஆசிரியர்கள் அவ்வப்போது புதிய புதிய தொழில்நுட்பங்களையும், புதிய பாடங்களையும் படித்து தெரிந்து அவற்றை மாணவர்களை கற்கவைக்க வேண்டும். எனவே சவால் மிகுந்த இந்த காலத்தில் திறமையான மாணவர்களை ஆசிரியர்களாக போகும் நீங்கள் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு ஆர்.கோவிந்தா பேசினார்.
வரவேற்பு
விழாவில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்கா, ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.
விழா நடைபெறுவதற்கு முன்பாக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் உள்ள ஒரு மின் விளக்கில் இருந்து மின்சார கசிவு காரணமாக புகை வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அரங்கில் உட்கார்ந்திருந்த மாணவ- மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அதை அணைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகள் அரங்குக்குள் உட்கார அனுமதிக்கப்பட்டனர்

Saturday, August 9, 2014

பி.எட். படிப்புக்கான காலத்தை இரு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பியபோது, தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.

Friday, August 8, 2014

பி.எட்., வகுப்பறை பயிற்சியில் சிக்கல் இடைநிலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, பி.எட்., முடிப்பது அவசியம்.பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தபால் வழியில் பி.எட்., படிப்பு, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை உள்ளிட்ட பல பல்கலையில் வழங்கப்படுகிறது. இதில் ஆசிரியர் வகுப்பறை பயிற்சியாக, 40 நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.பி.எட்., என்பதால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 9, 10ம் வகுப்புகளில் மட்டுமே வகுப்பறை பயிற்சியை எடுத்துக்கொள்ளவேண்டும் என, ஸ்டடி சென்டர்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், சேலம் மாவட்டத்தில் துவக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும், 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வகுப்பறை பயிற்சிஅனுமதிக்கு, தொடக்கக்கல்வி அலுவலகத்தை அணுகியபோது, நடுநிலைப்பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்கள் அனைத்தும், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு பாடம் நடத்தினால் மட்டுமே, பி.எட்., பட்டம் வழங்கப்படும் என, மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், இருதலைக்கொள்ளி எறும்பாக, இடைநிலை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:தொடக்கக்கல்வி அலுவலகத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பயிற்சி எடுப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என, ஸ்டிரிக்டாக கூறிவிட்டனர்.

ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்களோ, 9, 10ம் வகுப்புகளில் தான் பயிற்சி எடுக்க வேண்டும் என, கூறுகின்றனர். ஸ்டடி சென்டர்களோ, "தமிழகம் முழுவதும் இதே நிலை' என்கின்றனர். சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர். படிப்பை முடிக்கும் வேலையில், இரு தரப்பினரும் தொடர்ந்து அலைக்கழித்து வருவதால், என்ன செய்வதென தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sunday, August 3, 2014

6ம் தேதி முதல் 9ம் தேதி வரை
பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு

மதுரை: பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு வரும் 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 169 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மாநிலத்தின் 20 இடங்களில் ஆன்லைன் வசதி செய்து விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டதில், 10 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் ஆக.6ல் துவங்கி ஆக.9 வரை நெல்லை, மதுரை, சேலம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்படும். இக்கலந்தாய்வு முடிந்ததும் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.

அகில இந்திய அளவில் பிஎட், கால அளவை 2 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து எழுத்து பூர்வமான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15ம் கல்வியாண்டில் தமிழகத்தில் புதிதாக 15 கல்வியியல் கல்லூரிகள் துவக்க அனுமதிக்கப்படும். அனைவருக்கும் கல்வி கொள்கையில் தரமான கல்வி கொடுக்க வேண்டும். இதற்கு தரமான தகுதியான ஆசிரியர்கள் வேண்டும். இதனடிப்படையில்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தகுதித்தேர்வு குறித்து பிஎட் படிப்பிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி: துணைவேந்தர் தகவல்

தமிழகத்தில், 2014-15 நடப்புக் கல்வியாண்டில் புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் துவங்குவதற்கு முன்னதாக, கல்லூரிகளின் பேராசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் போன்றோர்களை ஒருங்கிணைத்து 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறவேண்டும், கல்வி பயிற்றுவிப்பது எப்படி, பிரச்னைக்கு இடம் தராமல் நிர்வகிப்பது எப்படி, மாணவர்களிடம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், பெற்றோர்களிடம் நிர்வாகத்தினர் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத காரணத்தால் பிரச்னை எழும்போது சமாளிப்பது எப்படி போன்றவை குறித்து பல்கலைக்கழகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கான கல்வி பயிற்றுவித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து விளக்கம் தரப்படும்.

இந்த ஆண்டுக்கு, ஏற்கனவே சென்னை, கோவை ஆகிய இடங்களில் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்2-ம் தேதி இன்று(நேற்று) மதுரை கேஎல்என் கல்வியியல் கல்லூரியில் மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட்3-ம் தேதி இன்று நெல்லையிலும், 4-ம்தேதி சேலத்திலும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டங்களில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது, மாணவர் சேர்க்கையிலும் அரசு உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வலியுறுத்தி கூறப்படுகிறது. இதனால், 2 ஆண்டுகளில் மாநிலத்திலுள்ள 60 சுயநிதிக் கல்லூரிகள் குறித்து எவ்வித புகாரும் வந்ததில்லை.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளிலுள்ள 2,169 இடங்களுக்கு விண்ணப்பிக்க 29 இடங்களில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டது. இதில் 10,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2,169 தகுதியான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி துவங்கி, 9-ம் தேதி வரை நடைபெறும். ஒற்றைச்சாளர முறையில் நெல்லை, மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இக்கலந்தாய்வு முடிந்தவுடன் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.

கல்லூரி, பள்ளிகள் இருக்கும் வரை பிஎட் படிப்புக்கான மவுசு குறையாது. முன்பு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது, 1-5-ம் வகுப்பு வரை மட்டுமே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் வாய்ப்பு கொடுக்கப்படுவதால், பிஎட் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பல வெளிநாடுகளிலும் தமிழக பிஎட் கல்விப் பாடத்திட்டத்தை பின்பற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அகில இந்திய அளவில் பிஎட் படிப்புக்கான காலஅளவை 2 ஆண்டுகளாக நீடிப்பது குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. துணைவேந்தர் என்ற முறையில் எழுத்துப்பூர்வமாக எங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம். அதை வெளிப்படையாக கூறஇயலாது.

2014-15 நடப்புக் கல்வியாண்டில் 12 புதிய கல்வியியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்படும், என்றார்.

Monday, July 21, 2014

பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல் - தினமலர்பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல் - தினமலர்

மதுரை:"பி.எட்., படிப்பிற்கு 'ஆன்--லைனில்' விண்ணப்பிக்கும் போது, 'கிரேடிங்' முறையிலுள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலையில் அதற்கான உரிய மதிப்பெண் பெற்று குறிப்பிட வேண்டும்," என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை 'கவுன்சிலிங்' மூலம் நடக்கவுள்ளது.

இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். முதல் முறையாக இந்தாண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக மாநிலம் முழுவதும் 29 ஒருங்கிணைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மதுரையில் ஜஸ்டின், சிவகங்கையில் அழகப்பா கல்வியியல் கல்லுாரி, துாத்துக்குடி வ.உ.சி.,, நெல்லை செயின்ட் இக்னீசியஸ் கல்வியியல் கல்லுாரிகளின் மையங்களில் விண்ணப்பிக்கலாம். 'கிரேடு' முறையில் உள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலையில் இருந்து உரிய மதிப்பெண் பெற்று, விண்ணப்பத்தில் குறிப்பிட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும், என்றார்

Thursday, July 17, 2014

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் 21 உள்ளன. 649 சுயநிதி பி.எட். கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 2 ஆயிரத்து400 பி.எட். இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு மட்டும் ஒற்றைச் சாளற முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவ–மாணவிகளை சேர்க்க உள்ளோம். இந்த கலந்தாய்வு முதல் முதலாக பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.பி.எட். படிக்க விரும்பும் மாணவ–மாணவிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 19–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 29 மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 3 மையங்கள் ஏற்படுத்தி அவற்றில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரியில் உள்ள மையத்தில் விண்ணப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையத்தை நாடலாம்.இது பற்றிய முழுவிவரமும் இணையதளத்தில் (www.onlinetn.com) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 19–ந்தேதி தான் செயல்படத் தொடங்கும். அன்று விவரங்களை அறிந்து கொள்ளலாம். 28–ந்தேதி கடைசி நாள் விண்ணப்பிக்க மாணவ–மாணவிகள் அந்த மையங்களுக்கு செல்லும்போது, புகைப்படம் வைத்திருந்தால் கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் உங்களை அதிகாரிகளே புகைப்படம் எடுப்பார்கள்.விண்ணப்பிக்க அத்தனை உதவிகளையும் செய்வார்கள். தப்பாக விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம். எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த 29 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்க 28–ந்தேதி கடைசி நாள்.பல்கலைக்கழக இணைய தள முகவரி www.tntue.in கலந்தாய்வு 28–ந்தேதிக்கு பிறகு 3 அல்லது 4 நாட்கள் கழித்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். பாடம் வாரியாக வெளியிடப்பட உள்ளது. பின்னர் ரேங்க் மற்றும் கலந்தாய்வு தேதி அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ்.மூலம் அனுப்பப்படும். செல்போன் மற்றும் பி.எஸ்.என்.எல். தரைவழி (லேண்ட் லைன்) தொலைபேசி மூலமும் பேசி தெரிவிக்கப்படும். எம்.எட். படிப்பில் சேர விண்ணப்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது பல்கலைக்கழக பதிவாளர் கலைச்செல்வன் உடன் இருந்தார்.