Saturday, August 9, 2014

பி.எட். படிப்புக்கான காலத்தை இரு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பியபோது, தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.

Friday, August 8, 2014

பி.எட்., வகுப்பறை பயிற்சியில் சிக்கல் இடைநிலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, பி.எட்., முடிப்பது அவசியம்.பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தபால் வழியில் பி.எட்., படிப்பு, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை உள்ளிட்ட பல பல்கலையில் வழங்கப்படுகிறது. இதில் ஆசிரியர் வகுப்பறை பயிற்சியாக, 40 நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.பி.எட்., என்பதால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 9, 10ம் வகுப்புகளில் மட்டுமே வகுப்பறை பயிற்சியை எடுத்துக்கொள்ளவேண்டும் என, ஸ்டடி சென்டர்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், சேலம் மாவட்டத்தில் துவக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும், 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வகுப்பறை பயிற்சிஅனுமதிக்கு, தொடக்கக்கல்வி அலுவலகத்தை அணுகியபோது, நடுநிலைப்பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்கள் அனைத்தும், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு பாடம் நடத்தினால் மட்டுமே, பி.எட்., பட்டம் வழங்கப்படும் என, மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், இருதலைக்கொள்ளி எறும்பாக, இடைநிலை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:தொடக்கக்கல்வி அலுவலகத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பயிற்சி எடுப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என, ஸ்டிரிக்டாக கூறிவிட்டனர்.

ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்களோ, 9, 10ம் வகுப்புகளில் தான் பயிற்சி எடுக்க வேண்டும் என, கூறுகின்றனர். ஸ்டடி சென்டர்களோ, "தமிழகம் முழுவதும் இதே நிலை' என்கின்றனர். சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர். படிப்பை முடிக்கும் வேலையில், இரு தரப்பினரும் தொடர்ந்து அலைக்கழித்து வருவதால், என்ன செய்வதென தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sunday, August 3, 2014

6ம் தேதி முதல் 9ம் தேதி வரை
பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு

மதுரை: பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு வரும் 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 169 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மாநிலத்தின் 20 இடங்களில் ஆன்லைன் வசதி செய்து விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டதில், 10 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் ஆக.6ல் துவங்கி ஆக.9 வரை நெல்லை, மதுரை, சேலம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்படும். இக்கலந்தாய்வு முடிந்ததும் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.

அகில இந்திய அளவில் பிஎட், கால அளவை 2 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து எழுத்து பூர்வமான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15ம் கல்வியாண்டில் தமிழகத்தில் புதிதாக 15 கல்வியியல் கல்லூரிகள் துவக்க அனுமதிக்கப்படும். அனைவருக்கும் கல்வி கொள்கையில் தரமான கல்வி கொடுக்க வேண்டும். இதற்கு தரமான தகுதியான ஆசிரியர்கள் வேண்டும். இதனடிப்படையில்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தகுதித்தேர்வு குறித்து பிஎட் படிப்பிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி: துணைவேந்தர் தகவல்

தமிழகத்தில், 2014-15 நடப்புக் கல்வியாண்டில் புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் துவங்குவதற்கு முன்னதாக, கல்லூரிகளின் பேராசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் போன்றோர்களை ஒருங்கிணைத்து 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறவேண்டும், கல்வி பயிற்றுவிப்பது எப்படி, பிரச்னைக்கு இடம் தராமல் நிர்வகிப்பது எப்படி, மாணவர்களிடம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், பெற்றோர்களிடம் நிர்வாகத்தினர் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத காரணத்தால் பிரச்னை எழும்போது சமாளிப்பது எப்படி போன்றவை குறித்து பல்கலைக்கழகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கான கல்வி பயிற்றுவித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து விளக்கம் தரப்படும்.

இந்த ஆண்டுக்கு, ஏற்கனவே சென்னை, கோவை ஆகிய இடங்களில் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்2-ம் தேதி இன்று(நேற்று) மதுரை கேஎல்என் கல்வியியல் கல்லூரியில் மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட்3-ம் தேதி இன்று நெல்லையிலும், 4-ம்தேதி சேலத்திலும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டங்களில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது, மாணவர் சேர்க்கையிலும் அரசு உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வலியுறுத்தி கூறப்படுகிறது. இதனால், 2 ஆண்டுகளில் மாநிலத்திலுள்ள 60 சுயநிதிக் கல்லூரிகள் குறித்து எவ்வித புகாரும் வந்ததில்லை.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளிலுள்ள 2,169 இடங்களுக்கு விண்ணப்பிக்க 29 இடங்களில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டது. இதில் 10,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2,169 தகுதியான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி துவங்கி, 9-ம் தேதி வரை நடைபெறும். ஒற்றைச்சாளர முறையில் நெல்லை, மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இக்கலந்தாய்வு முடிந்தவுடன் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.

கல்லூரி, பள்ளிகள் இருக்கும் வரை பிஎட் படிப்புக்கான மவுசு குறையாது. முன்பு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது, 1-5-ம் வகுப்பு வரை மட்டுமே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் வாய்ப்பு கொடுக்கப்படுவதால், பிஎட் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பல வெளிநாடுகளிலும் தமிழக பிஎட் கல்விப் பாடத்திட்டத்தை பின்பற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அகில இந்திய அளவில் பிஎட் படிப்புக்கான காலஅளவை 2 ஆண்டுகளாக நீடிப்பது குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. துணைவேந்தர் என்ற முறையில் எழுத்துப்பூர்வமாக எங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம். அதை வெளிப்படையாக கூறஇயலாது.

2014-15 நடப்புக் கல்வியாண்டில் 12 புதிய கல்வியியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்படும், என்றார்.