பி.எட்., கணினி அறிவியல் படிப்புக்கு, முறையான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராமசந்திரன், மாநில செயலாளர் குமரேசன் ஆகியோர் கூறியதாவது:
கடந்த, 1992 முதல் இன்று வரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கணினி அறிவியலில் பி.எட்., படித்துள்ளனர். இப்படிப்புக்கு தமிழக அரசு முறையாக அங்கீகாரம் வழங்கவில்லை. அரசு நடத்தும் ஆசிரியர் நியமன தேர்விலும், வாய்ப்பு வழங்குவதில்லை.
ஏ.இ.இ.ஓ., - டி.இ.ஓ., பதவிகளுக்கு, பி.எட்., முடித்திருந்தால், தகுதி என இருக்கும் நிலையிலும், பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகளை அனுமதிப்பதில்லை.
சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் கூட, புறக்கணிக்கின்றனர். தனியார் பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்திவிட்டு, எங்களைப்போல, முறையாக படித்தவர்களை நியமிப்பதில்லை.
எங்களுக்கு எந்த ஒரு பணி வாய்ப்பும் இல்லாத நிலையில், தமிழக அரசு பி.இ., படித்தவர்களும் பி.எட்., படிக்க அனுமதி வழங்கி இருப்பது வேதனைக்கு உரியதாகும். பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - பி.எட்., என படித்து முடித்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினி அறிவியல் பட்டதாரிகள் வேலைக்காக காத்துள்ள நிலையில், தமிழக அரசு, இக்கல்விக்கு முறையான அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இல்லாவிடில் இந்த கல்வியை ரத்து செய்ய வேண்டும். அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுவதைவிட, எங்கள் கல்வியை அங்கீகரித்து, முறையான வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.
புதிய கல்வி கொள்கையில், அனைத்து பள்ளிகளிலும் கணினி தொழில் நுட்ப கல்விக்கான பாடத்திட்டம் உள்ளது. அதை அனுமதித்தால், எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment